Thursday, June 19, 2008

கும்பகர்ணன் தன் தூக்கத்தை உனக்குத் தந்தானோ!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


பாவை நோன்பு இருந்து சொர்க்கம் போக நம்பிக்கையா இருக்கற பொண்ணே! கதவையும் திறக்காம கூப்பிட்ட குரலுக்கும் பதில் கொடுக்காம அப்படி என்னத் தூக்கமோ? நாம பக்தியோட சேவிச்சா நமக்கு வேண்டியறதத் தர்ற நாராயணனால கொல்லப்பட்ட கும்பகர்ணன் தன்னோட தூக்கத்த உனக்குக் கொடுத்துட்டு யமன்கிட்ட போயிட்டானோ? ஆழ்ந்த தூக்கத்துல விழுந்திருக்கற தோழியே! நீ எங்க குழுவுல ஒரு விளக்கு! வா வ்ந்து கதவத்திற! நாமெல்லாம் சேர்ந்து நோன்பிருப்போம்!

மாமன் மகளே! கதவைத் திறவாய்!


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்

மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.


மாமன் மகளே! ரத்தினங்கள் ஜொலிக்கற மாடத்த சுத்தி விளக்கெரியறது; அருமையான பத்தி மணம் கமழறது. நீயோ நன்னா பஞ்சணை மேல உன்னையே மறந்து இன்னும் தூங்கிண்டு இருக்கறயே! கதவத் திற முதல்ல! மாமி! உங்க பொண்ண எழுப்புங்கோ! அவ என்ன செவிடா இல்லை ஊமையா? இல்லை சோர்வடஞ்சுட்டாளா? இல்லை யாராவது இப்படித் தூங்கறதுக்கு சாபம் நாம எல்லாரும் அந்த மாயன், மாதவன், வைகுந்தனோட நாமத்தச்ச் சொல்லீ அவள எழுப்புவோம்.


Monday, June 2, 2008

கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய்!

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.


உற்சாகமுள்ள பெண்ணே! கிழக்க சூரியனோட வருகையால சிவந்த வானம் இப்ப வெள்ளையா மாற ஆரம்பிச்சுடுத்து. பசியோட உள்ள எருமைகளெல்லாம் இப்ப மேயறதுக்காக பக்கத்துல உள்ள புல்வெளிக்குப் போயாச்சு. நாங்களும் மத்த கோபியற எழுப்பி இப்ப உன்னைய எழுப்ப வந்திருக்கோம். சீக்கரம் எழுந்திருடீ! நாம எல்லாருமா சேர்ந்து அந்த பகவானோட மகிமையப் பாடினா நாம வேண்டறது எல்லாத்தையும் அவன் தருவான். கேசி அசுரனோட வாயை பிளந்து கொன்ற அந்த பகவான் - கம்சனோட சபையில உள்ள மாவீரர்களெல்லாரையும் கொன்ற தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான அந்த நாராயணன், நமக்கு எல்லா நலத்தையும் கொடுப்பான். அதனால, சீக்கிரமா எழுந்து வாடி!


நாராயணனோட மகிமையைப் பாடுவோம்!

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து

வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்.


ஏய் பேய்ப் பெண்ணே! கீச்சு கீச்சுன்னு கத்தற ஆனைச்சாத்தான் பட்சிகளோட சத்தம் உன் காதுல விழலையா? பொழுது விடிஞ்சாச்சு. உன்னைச்சுத்தி உள்ளவா எல்லாம் எழுந்தாச்சு. நறுமணமுள்ள பூக்களத் தலையில வச்சுண்டு மத்த கோபிகளெல்லாம் மத்தால தயிர் கடையற சத்தம் உனக்கு கேக்கலை? அவா போட்டுண்டு இருக்கற காசுமாலையும் வளையலும் கிலுகிலுக்கற சத்தம் கூட உனக்குக் கேக்கலையா? நாங்களெல்லாம் கேசவனைப் பாடும் போது உன்னால மட்டும் எப்படித் தூங்க முடியறது? அழகான தோழியே! வா! வந்து கதவத் திற. நாம எல்லரும் சேர்ந்து அந்த நாராயணனோட மகிமையைப் பாடுவோம்!

Tuesday, February 26, 2008

அரி என்ற பகவான் நாமகோஷம் கேக்கலயா?

எனக்குப் பிடிச்ச திருப்பாவைப் பாசுரங்கள்ல இதுவும் ஒண்ணு. ஆண்டாள் இதுல சொல்லற உவமைகள் எல்லாமே ரொம்ப நன்னா இருக்கு.


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


அடியே இளம்பெண்ணே! பொழுது விடிஞ்சாச்சுன்னு பறவைகளெல்லாம் சத்தம் போடறதப் பாரு. கருடனை வாகனமாகக் கொண்டிருக்கற நம்ம பகவானோட கோவில்ல வெண்சங்கு ஊதறாளே, அது உனக்குக் கேக்கலையா? எழுந்திருந்து பாரு! சின்னகுழந்தையா இருந்தப்ப போதனைங்கற அரக்கியோட பாலை உறிஞ்சினப்பவே அவளோட உயிரையும் குடிச்சு, தன்னைக் கொல்ல வந்த அரக்கனைத் தன்னோட சின்னக் காலாலையே உதைச்சுக் கொன்னானே பாற்கடல்ல ஆதிசேஷன் மேல சயனிக்கற நம்ம பகவான், அவனை மனசுலயே பூஜை செய்து முனிவர்களும், யோக சித்தர்களும் தங்களோட தவத்துலேந்து எழுந்து 'அரி'ன்னு கோஷம் எழுப்பறா. அந்த சத்தம் நம்ம மனசை குளிர்விக்கும்டீ. அத கேட்டு நம்ம பாவை விரதத்தை தொடர எழுந்திருடீ பொண்ணே!


(விரதம் தொடர்வாள் கோதை...)

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க...


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

தூய பெரு நீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


மதுராவுல பொறந்த வீரம் மிக்கவனான அந்த மாயக்கண்ணணை, யமுனா நதியில கோபியரோட விளையாடற அந்த பகவானை, ஆயர் குலத்துல உதிச்ச அந்த விளக்கொளி போன்ற பிரகாசமானவனை, தான் மகனாகப் பொறந்ததுனாலேயே தன்னோட அம்மாவுக்கு மேன்மையைத் தந்தவனை நாம எல்லாரும் போய் சிரத்தையோட பூக்களைக் கொண்டு அர்ச்சனை பண்ணி நமஸ்காரம் செய்து, அவனோட நாம கீர்த்தனங்களைப் பாடி, நம்ம மனசாலேயே சேவிச்சோம்னா, நாம போன ஜன்மங்கள்ளயும், இந்த ஜன்மத்துலேயும் எதேனும் பாவம் பண்ணிருந்தாலும் இனிமேல் வர்றப்போற பிறப்புல எதேனும் பாவம் பண்ணினாலும் அந்தப் பாவங்களெல்லாம் நெருப்புல விழுந்த தூசியப்போல பொசுங்கிடுமாக்கும். அதனால அந்த மாயக்கண்ணனை நாம எல்லாரும் பக்தி சிரத்தையோடு சேவிப்போம்.


(விரதம் தொடர்வாள் கோதை...)

வாழ உலகினில் ஆழி மழை பெய்!

தமிழுக்கு '' அழகு. ஆனா நம்மள்ள நிறைய பேருக்கு ''னாவே வராது. 'தமிழ் அழகான மொழி'ன்னு சொல்லச் சொன்னா, 'தமிள் அளகான மொளி'னு சொல்லுவோம். இந்தப் பாசுரத்துல கோதை என்ன அழகா ''னாவ உபயோகிச்சிருக்கா தெரியுமாவருண பகவான்கிட்ட மழையைக் கொண்டு வரச்சொல்லிக் கேக்கறா கோதை. அதுவும் எப்படி பெய்யணுமாம் பாருங்கோ...


ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


வருண பகவானே! கடல்போன்ற பெருமழையைக் கொண்டு வரும் அண்ணலே! நீ நன்னா ஜோன்னு மழை பெய்ய வைக்கணும். அதுல குறையேதும் வச்சுடாதே! எப்படிப் பெய்யணும் தெரியுமா? முதல்ல நீ கடலெல்லாம் வற்றும்படியா கடலுக்குள்ள புகுந்து அந்தத் தண்ணீரெல்லாத்தையும் உறிஞ்சிண்டு மேலே போய், ஊழி முதல்வனான ஜகந்நாதன் திருமேனியப் போல உன்னோட மேகங்கள் கருமையாகி, பரந்த தோள்களுடைய பத்மநாபன் கையில இருக்கற சக்கரத்தைப் போல மின்னலடிச்சு, அவன்கிட்ட இருக்கற வலம்புரிச்சங்கு அதிர்றது போல இடி இடிச்சு, கண்ணனோட சாரங்க வில்லுல இருந்து நிக்காம புறப்படற அம்பு மழை மாதிரி நீயும் நிறுத்தாம மழையைக் கொட்டோகொட்டுனு கொட்டணும். அப்படி நீ கொடுக்கற மழை, இந்த லோகத்துல செழிப்பக் கொண்டுவந்து எல்லாரையும் நன்னா வாழ வைக்கணும். நாங்களும் அதுல மார்கழி நீராடணும். வருண பகவானே! அப்படி ஒரு மழையைக் கொண்டுவா!


(விரதம் தொடர்வாள் கோதை...)